துப்பாக்கிகளுடன் சிக்கிய கும்பல் உள்பட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காட்பாடி அருகே 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா 4 கைத்துப்பாக்கி ரூ.3.50 லட்சம் பணம் 472 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

வேலூர்:

காட்பாடி கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கும்பல் சதித்திட்டத்துடன் கூடி விவாதித்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று 5 பேர் கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பேரணாம்பட்டு ஏரிக்குத்தி பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்றும் மற்றவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), மணலியை சேர்ந்த அசோக் (39), ராயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (27), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாலன் (26) என்றும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா 4 கைத்துப்பாக்கி ரூ.3.50 லட்சம் பணம் 472 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் இம்ரானின் மனைவிக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இம்ரான் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறை சென்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் அந்த இளைஞருடன் சென்றுவிட்டார். இந்த தகவலை அடுத்து தனது மனைவியை மீட்பதற்காக இளைஞரின் பெற்றோரை கடத்தி மிரட்டுவதற்காக சதித்திட்டம் தீட்ட முயன்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இதில் இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இதற்கான ஆணை வேலூர் ஜெயிலில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதேபோல குடியாத்தம் அருகே கஞ்சா கடத்தியதாக புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 26). கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்த குமரன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com