என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்கு சீல்
- வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
- ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு உள்ள கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள் மற்றும் நெகிழி தட்டுகள் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இருந்தபோதிலும் நீலகிரியில் ஒருசில வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர். ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது, பிளாஸ்டிக் 'பேக்கிங்' உள்ளிட்ட பயன்பாடுகளும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






