

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நேற்று வெகுநேரமாக பள்ளி மாணவி ஒருவர் வாலிபருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அங்கிருந்த கடைக்காரர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முப்பிடாரி மற்றும் ஏட்டு அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவி மணப்பாறையில் 10ம் வகுப்பு படித்து வருவதும், தனக்கு ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக் கொடுத்த செல்போனில் திண்டுக்கல்லை சேர்ந்த 21 வயது வாலிபர் அறிமுகமானதாகவும் தெரிவித்தார்.
டந்த சில மாதங்களாக அவருடன் செல்போனிலேயே பேசி வந்த நிலையில் தனது காதலன் நேரில் பார்க்க வேண்டும் என கூறியதால் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு செல்லாமல் நேரடியாக திண்டுக்கல் பஸ்நிலையம் வந்ததாகவும் கூறினார். அவருடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டைல்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார்.
இதனை தொடர்ந்து மணப்பாறை போலீஸ் இன்ஸ் பெக்டர் கருணாகரனிடம் மாணவி இங்கு வந்தது குறித்து தெரிவித்தனர். அப்போது அவர்களது பெற்றோரும் தங்கள் மகளை காணவில்லை என புகார் அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பிவிட்டு மாணவியை மணப்பாறைக்கு கொண்டு சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் பஸ்நிலையம், மெயின்ரோடு, கடைவீதி, அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள நிழற்குடை ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் பள்ளி மாணவிகள் காதலருடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி தற்போது தினசரி நிகழ்வாக நடந்து வருகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.