search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்: சத்யபிரத சாகு
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்: சத்யபிரத சாகு

    • தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
    • தமிழகத்தை பொறுத்தவரை 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சென்னை :

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரம் (வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்த வாக்கை உறுதி செய்து தகவல் அளிக்கும் கருவி) ஆய்வு செய்வது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

    இந்த பயிற்சி கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரங்கள் தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வி.வி.பேட் எந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்வது தொடர்பாகவும், ஏதேனும் குறைபாடு இருந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஜூலை 4-ந் தேதி முதல் மாவட்டம் தோறும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். இதில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்பார்கள்.

    வழக்கமாக தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ஆய்வுக்கு பின்பு இந்த எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு தேர்தலின் போது பயன்படுத்தப்படும்.

    தமிழகத்தை பொறுத்தவரை 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அங்கு தேவைப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியும்.

    இருப்பினும் தேவைக்கு அதிகமாகவே வாக்குப்பதிவு எந்திரங்களை கையிருப்பில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசியல் கட்சியினருக்கும் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.

    தமிழகத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 357 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அதை கட்டுப்படுத்துவதற்காக 1 லட்சத்து 2 ஆயிரத்து 581 எந்திரங்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 732 வி.வி.பேட் எந்திரங்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. 30 சதவீத எந்திரங்கள் கூடுதலாகவே உள்ளது.

    ஒரு வாக்குப்பதிவு மையத்துக்கு 1,500 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×