search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் 5-ந் தேதி சாரல் திருவிழா தொடக்கம்-கலெக்டர் ஆகாஷ் தகவல்
    X

    கலெக்டர் ஆகாஷ்.

    குற்றாலத்தில் 5-ந் தேதி சாரல் திருவிழா தொடக்கம்-கலெக்டர் ஆகாஷ் தகவல்

    • சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.
    • புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    தென்காசி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்தப்படாமல் இருந்துவந்தது.

    8 நாட்கள் சாரல் திருவிழா

    இந்நிலையில் தற்பொழுது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதால் இந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை 8 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இதையொட்டி புத்தகத் திருவிழா குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வைத்து நடத்தப்பட உள்ளது. சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.

    அரங்குகள்

    பல்வேறு அரசுத் துறையின் சார்பில் கலைவாணர் அரங்கத்தின் வெளிப்பகுதியில் அரங்குகள் அமைக்கப்படும். சாரல் திருவிழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், கச்சேரி, ஆணழகன் போட்டி, நாய்கள் கண்காட்சி, பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    மலர் கண்காட்சி

    ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர்க்கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரின் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×