

ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஊராட்சியில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கிராம ஊராட்சி வள குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டியும், சாக்கடை வசதி வேண்டியும், தினமும் கிராமத்தில் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனுக்கள் கொடுத்தனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூறும்போது, அனைத்து பகுதிக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் விநியோகம் செய்ய முறையான திட்டம் வகுக்கப்படும், தற்போது கிடைக்கும் தண்ணீரை முறையாக அனைத்து பகுதிக்கும் விநியோகம் செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், குப்பை தொட்டியில் போட வேண்டும். மக்கும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்கள் வசம் கொடுக்க வேண்டும்.
நீர் நிலைகளில் குப்பைகளை கோட்ட கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள், கடன் அட்டை பதிவு செய்தல் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.