

சேலம்:
சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 76). இவர், சத்தியமங்கலம் அருகே உள்ள பங்களாபுதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று 37 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்.
சேலம் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் 3 நாள் பரோல் கேட்டு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் மாதையன் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலனை செய்த அவர், 3 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை வீரப்பனின் அண்ணன் மாதையன் சேலம் சிறையில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவரை உறவினர்கள் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலுக்கு அழைத்து சென்றனர்.