

ஏற்காடு:
வசந்த காலம் தொடங்க உள்ள நிலையில், ஏற்காடு சுற்றுலா மலைப்பகுதியில் காணும் இடமெல்லாம் பசுமையாகவும், மரங்களின் இலைகள் பல வண்ணங்களாகவும் காட்சியளிக்கின்றன.
கோடைக்காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகைக்காக தோட்டக்கலைத் துறை பராமரிக்கும் அரசு பூங்காக்களில் முன்னேற்பாடுகள், பூங்கா வடிவமைப்பு, மலர் செடிகள் நடவு போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாத நிலையில், தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களாகவே கர்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் ஏற்காடு சுற்றுலாப் பகுதியான படகு இல்லம், ஏரி பூங்கா, அண்ணா பூங்கா, சேர்வராயன் கோவில் மலைப்பகுதி, கரடியூர் வனகாட்சிப்பகுதி, பக்கோடா காட்சி முனை, ரோஜா தோட்டம், லேடிசீட், தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகளை சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலாப்பகுதி சாலைகள், கடைகளில் கூட்ட நெரிசலைக் காண முடிந்தது.