

சேலம்:
பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு தற்போது திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் இதுவரை 10 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. 10-வது தவணை கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது 11-வது தவணை தொகை (ஏப்ரல் 2022 -ஜூலை 2022) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2,74,083 விவசாயிகள் இதுவரை பயனடைந்து வருகின்றனர். பி.எம். கிசான் திட்டத்தின் பதிவு செய்த விவசாயிகளுக்கு சுய விவரம் (இ-கே.ஒய்.சி. )கட்டாயம்.
எனவே ஆதார் எண் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் எண்ணை வங்கி கணக்கு புத்தகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிஎம் கிசான் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் வருகிற 31 -ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.