

வாழப்பாடி:
வாழப்பாடி காளியம்மன் நகர் பாப்பான் ஏரியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு பெய்த பருவமழையால் தண்ணீர் தேங்கியது. தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் ஏராளமானோர் ஏரியில் இறங்கி மீன்கள் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் ஏரியில் மிதப்பது இப்பகுதி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் இதுகுறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏரியில் பிணமாக மிதந்தவர் வாழப்பாடி சடையப்பர் தெரு பகுதியை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி குமார் (40) என்பதும், இவர் மீன் பிடிப்பதற்காக வலை விரித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் சடலமாக மீட்கப் பட்டவர் இரு தினங்களுக்கு முன், பாம்பு ஒன்றை பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்ததாக இதனை நேரில் கண்ட இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.