

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருந்த 2 தேக்கு மரங்களை சிலர் வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அசோகனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், பைத்தூர் பள்ளியில் சுற்றுசுவர் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்த 2 தேக்கு மரங்களை வெட்டி கடத்தி விட்டனர்.
மேலும் கற்களையும் திருடிச்சென்று உள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அசோகன் நேரில் விசாரணை நடத்தினார்.