

சேலம்:
சேலம் சுகவேனேஸ்வரர் கோவில் யுகங்கள் நான்காலும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும், சிறப்பு வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் அம்சமான வேத வியாசரின் மகனான ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியால் வழிபட பெற்ற ஒரே திருத்தலம் இது.
18 சித்தர்களின் தாய் என்றழைக்கப்படும் சுதந்திர சக்தியாக உள்ள சொர்ணாம்பிகை அம்மனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். போரில் வெற்றி பெற அகத்தியரால் உபதேசிக்கப்பட்டு ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்தது வசந்த நவராத்திரி விழாவாகும்.
சிறப்பு வாய்ந்த வசந்த நவராத்திரியின் 10 தினங்களும், வெளியே உணவு மற்றும நீர் அருந்தாமல் இயற்கையான உணவுகளை உண்டு பக்தி சிரத்தையுடன் விரதம் இருப்பது பக்தர்களின் வழக்கமாகும்.
இந்த வசந்த நவராத்திரி திருவிழா சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்மனுக்கு இன்று தொடங்கி வருகிற 10-ந் தேதி வரை தினமும் 10 பாடல்கள் வீதம் மாலை 6.30 மணிக்கு பெண் பக்தர்களால் அபிராமி, அந்தாதி பாடப்படுகிறது.
16 வகையான உபச்சாரங்களுடன் தேவ மந்திரங்கள் முழங்க இரவு 8 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்றவுடன் அன்னதானமும் வழங்கப்படுகிறது.