

சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தங்கி பள்ளிப்படிப்பையும், விளையாட்டு பயிற்சிலும் ஈடுபடலாம். இதற்காக வருடம் ஒருமுறை மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலாதேவி கலந்து கொண்டு தேர்வு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ ஆகிய விளையாட்டுகளுக்கு தேர்வு நடந்தன.
இந்த விடுதிகளில் சேர்வதற்கான தேர்வில் 155 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவார்கள்.