

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் பொடையன் தெருவை சேர்ந்த சங்கர் மகன் பிரபாகரன் (வயது 16). அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று பிரபாகரன் நண்பர்களுடன் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றான். நண்பர்கள் கிணற்றுக்கு மேலே நின்று கொண்டிருந்தனர்.
பிரபாகரன் மட்டும் கிணற்றுக்குள் இறங்கி அங்கிருந்த கல்லை பிடித்துக்கொண்டு நீச்சல் பழகியதாக தெரிகிறது. அப்போது கல்லில் இருந்து கை நழுவி தண்ணீருக்குள் விழுந்தான். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினான்.
கிணற்றுக்கு மேலே நின்று கொண்டிருந்த நண்பர்கள், பிரபாகரனை காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய பிரபாகரனை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் செல்லும் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.