

மகுடஞ்சாவடி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும்படையினர் தேர்தல் நடைபெறும் பகுதிகளூக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இளம் பிள்ளை- சித்தர் கோவில் சாலையில் சிறப்பு தாசில் தார் சுந்தரராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த சேலத்தைச் சேர்ந்த பெயிண்ட் டீலர் காரில் ரூ.4 லட்சத்து 81 ஆயிரத்து 587 இருந்தது. காரில் வந்தவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை சிறப்பு தாசில்தார் சுந்தரராஜன் பறிமுதல் செய்து இடங்கணசாலை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சங்ககிரி சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.