

சேலம்:
சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி புதுவீதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (வயது 43). இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
விஜயா பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.பாலசுப்பிரமணி மகுடஞ்சாவடி யூனியன் ஆபீஸ் அருகே உள்ள ஒரு தோட்டத் தில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு இவர் வேலை யில் இருந்தபோது தண்ணீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததாகவும், அதில் பாலசுப்பிரமணியம் இறந்து விட்டதாகவும் விஜயாவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விஜயா மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு மோட்டார் அறை அருகே தண்ணீர் தொட்டி இடிபாடுகளுக்குள் பாலசுப்பிரமணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குகாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பாலசுப்பிரமணியம் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.