

சேலம்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்த பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பல்வேறு இடங்களில் மோட்டார் உள்ளிட்ட தீ தடுப்பு உபகரணங்கள் குறைபாடு உள்ளதை கண்டறிந்து சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு உபகரணங்கள் சில இடங்களில் குறைபாடு உள்ளது. அதனை 48 மணி நேரத்தில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தீ தடுப்பு குறித்து தனிக்குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.