ஜே.இ.இ. முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி தொடக்கம்

ஜே.இ.இ. முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி தொடங்குகிறது
.
.
Published on

சேலம்:

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், 2022-23-ம் ஆண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜே.இ.இ. தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதில் ஜே.இ.இ. முதற்கட்ட தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16, 17, 18, 19, 20, 21 ஆகிய நாட்களில் நடக்கிறது. 2-ம் கட்ட தேர்வு மே மாதம் 24, 25, 26, 27, 28, 29-ந் தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் வருகிற 31-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

தேர்வை பொறுத்த வரையில், கம்ப்யூட்டர் வழி தேர்வாக ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் நடத்தப்பட உள்ளது. 2 தாள் கொண்ட இந்த தேர்வில், முதல் தாள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி. மத்திய நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருக்கும் பி.இ., பி.டெக். இளநிலை படிப்புகளுக்கும், 2-வது தாள் பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com