

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
சேலம் மாநகர்
குறிப்பாக சேலம் மாநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கிச்சிப்பாளையம் நாராயணநகர், செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்மபட்டி, ஜங்சன், சத்திரம், பெரமனூர் , 4 ரோடு, 5 ரோடு உள்பட பல பகுதிகளில் சாக்கடை நீருடன், மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
சேலம் புறநகர் பகுதிகளான சங்ககிரி, எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மைழை கொட்டியது. இந்த மழையால் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கின. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஏற்காட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. புதிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
509 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக சங்ககிரியில் 133 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 72, ஏற்காடு மற்றும் ஓமலூரில் தலா 53, தம்மம்பட்டி 50, மேட்டூர் 44.2, சேலம் 39, காடையாம்பட்டி 30, கரியகோவில் 24, பெத்தநாயக்கன் பாளையம் 6, ஆனைமடுவு, ஆத்தூர் 1.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 509 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.