

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஓட்டலை தமிழ்நாடு அரசின் சுற்றுலா மற்றும் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்ததீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓட்டலின் உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதி அறைகள் அனைத்தையும் பார்வையிட்டார். தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே இருந்தும் பராமரிப்பின்றி இருந்ததை பார்வையிட்டு உடனடியாக தங்கும் அறைகள் மற்றும் உணவு விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு உத்தரவிட்டார். மேலும் ஓட்டலை சீரமைத்து அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஓட்டல் 1.96 ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2000-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஓட்டலில் 16 அறைகளும், ஒரு உணவகமும் அமைந்துள்ளன. ஓட்டல் கட்டப்பட்டது முதல் 4 ஆண்டுகள் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
குத்தகை காலம் முடிந்தவுடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திடம் தமிழ்நாடு ஓட்டல் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.