

காடையாம்பட்டி,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த அக்கராகாரம் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி முழுவதும் களிமண் மற்றும் ஒரம்பு நிறைந்துள்ளது. ஏரியில் மண் எடுக்க மாவட்ட கலெக்டர் சுமார் 4 அடி ஆழம் மட்டும் அனுமதி வழங்கி உள்ளார்.
ஆனால் இந்த ஏரியில் 100-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை வைத்துக்கொண்டு ஒப்பந்த–தாரர் குறிப்பிட்ட அளவுக்கு இல்லாமல் 20 அடி முதல் 30 அடி வரை ஆழம் தோண்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 4 அடி ஆழம் மட்டும் எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் சில இடங்களில் 20 அடிக்குமேல் மண் எடுப்பதாக கூறி பொதுமக்கள் டிப்பர் லாரிகளை முற்றுகை–யிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.