

ஏற்காடு:
ஏற்காட்டில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், திட்ட இயக்குநர் செல்வம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வின் போது சாலையோர கடை வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக விடுத்த கோரிக்கையை தொடர்ந்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் அனைத்து கடைக்காரர்களுக்கும் இடம் ஒதுக்கப்படும் எனவும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்ட கடைகளை ஏலம் எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
மீதம் உள்ள நபர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்படும் இடங்களில் கடைகள் வைத்துக் கொள்ளுமாறும் அதற்கான வாடகையை பஞ்சாயத்து நிர்வாகம் நிர்ணயிக்கும் எனவும் அமைச்சர் நேரு தெரிவித்தார். இதை தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டப்பட்ட கடைகளை பார்வையிட்டார்.
மேலும் ஏற்காடு டவுன் பகுதியில் புதிதாக வெட்டப்பட்டு வரும் கிணறுகளை பார்வையிட்டு விரைந்து பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கிட உத்தரவிட்டார். ஏற்காடு அண்ணா பூங்காவையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆண்டு ஏற்காட்டில் கோடைவிழாவை 5 நாட்கள் நடத்த திட்டமிட ஏற்பாடு மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
மேலும் கோடைவிழாவிற்கு முதல்அமைச்சர் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யவும், அதுதொடர்பான ஆலோசனை பெற்று முடிவெடுக்க கலெக்டரிடம் உத்தரவிட்டார்.