

அன்னதானப்பட்டி:
சேலம் டவுன் முகமது புறா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் ( வயது 38).
இவர் கிச்சிப்பாளையம் மெயின்ரோட்டில் பிரியாணி கடையில் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.15 மணியளவில் அவரது கடைக்கு 3 பேர் வந்தனர்.
பின்னர் திடீரென அங்குள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த நாற்காலிகள், பாத்திரங்கள், பொருட்களை ஆத்திரத்தில் தூக்கி வீசி நாசப்படுத்தினர். தொடர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்து ரூ.600 பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.