கனவு ஏற்காடு திட்டம் சேர்வராயன் கோவில் திடலில் வானியல் தொலைநோக்கு மையம்

கனவு ஏற்காடு திட்டம் சேர்வராயன் கோவில் திடலில் வானியல் தொலைநோக்கு மையம் கலெக்டர் கார்மேகம் தகவல்.
விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கிய காட்சி.
விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு கலெக்டர் கார்மேகம் பரிசு வழங்கிய காட்சி.
Published on

ஏற்காடு:

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

ஏற்காடு மலைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நல்ல வருமானமும், வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடன் கோடைவிழா மற்றும் மலர்க்காட்சி 8 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த கோடை விழா மற்றும் மலர்க்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்காக்கள், மரபியல் பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்காக்கள்  உள்ளிட்ட இடங்களை சுமார் 1 லட்சத்து 33 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து பார்வையிட்டுள்ளனர்.

 ஏற்காட்டினை சர்வதேச தரத்தில் முன்னேற்றுவதற்காக "நம்முடைய கனவு ஏற்காடு திட்டம்" என்ற ஒரு உன்னதமான திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் ஏற்காட்டின் மிக உயரிய இடமான சேர்வராயன் கோவிலில் வானியல் தொலைநோக்கி மூலம் வானத்தை கண்டுகழிக்கும் வகையிலும், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு புத்துணர்வு பயிற்சிக்காக ஒரு பயிற்சி திடல் அமைத்தல் மற்றும் மினி திரையரங்கம் அமைத்தல் உள்ளிட்டவைகள் கனவு ஏற்காடு திட்டத்தில் உள்ளது. 

குறிப்பாக, ஏற்காடு மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, குடிநீர், நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஏற்காட்டில் முகாம்கள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, புகைப்படப்போட்டி, இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி, கால்பந்து போட்டி, கபாடிப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கொழு கொழு குழந்தைப்போட்டிகள், சமையல் போட்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், காய்கறி வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை  கலெக்டர் கார்மேகம்  வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணுவர்த்தினி (சேலம்),  சரண்யா (ஆத்தூர்), தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் (பொ)  கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) (ஆத்தூர்) டாக்டர் ஜெமினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்  முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com