

சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அம்மனை கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அன்னதானப்பட்டி பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க இவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் மாணவி மனமுடைந்தார். பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி அழுதார். ஆனால் பெற்றோர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதனால் மாணவி தனது அனுமதியின்றி தனக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வருவதாக சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரை வரவழைத்து சிறு வயது திருமணம் சட்டப்படி குற்றமாகும் என்பதை எடுத்துக்கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீஸ் நிலையம் சென்று திருமண ஏற்பாட்டை தடுத்து நிறுத்திய மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.