

பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராமம் சீரடி சாய் நகரில் வசித்து வருபவர் பரமசிவம் (வயது 55).
இவர் சேலம் இரும்பாலையில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பரமசிவம் குடும்பத்துடன் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் இரவு 9 மணிக்கு திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பரமசிவமும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பரமசிவம் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.