தாரமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் மோதி எல்.ஐ.சி. ஏஜெண்ட் தலை நங்கி பலி

பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.
தாரமங்கலம் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியார் பஸ்.
தாரமங்கலம் அருகே லாரி மீது மோதி நிற்கும் தனியார் பஸ்.
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து இன்று காலை சேலம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் தாரமங்கலத்தில் இருந்து நங்கவள்ளி செல்லும் பிரதான சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

சாலையை கடக்க முயற்சி

பாறைகலூர் பகுதியில் லாரியில் வந்த காமலாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி பின்னர் லாரி மீது பயங்கரமாக மோதி நின்றது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டூர் வீரக்கல் அருகே கக்குவான் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (45) மற்றும் அவரது அண்ணன் மகனான ஹரிஹரன் (22) ஆகியோர் விபத்தில் சிக்கினர்.

தலை நசுங்கி

இதில் தங்கவேல் தலை மீது பஸ்சின் முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிஹரன் பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஹரிஹரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் ஓட்டம்

இதனிடையே பஸ்சை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சி

விபத்து குறித்து தகவல் அறிந்து தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான தங்கவேல் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரிஹரன் இளங்கலை பட்டபடிப்பு முடித்து விட்டு தறி தொழில் செய்து வருகிறார். இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலத்திற்கு செல்லும் போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com