search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா
    X

    முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா

    • சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கந்தசஷ்டி விரதம் கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று காலை மூலவர் சுப்ரமணியருக்கு வள்ளி, தெய்வானையுடன் அபிஷேகம் நடந்தது. பின்னர் சப்பரத்தில் உற்சவர் ஆறுமுகம் கொண்ட சண்முகர் கோவில்மாட வீதியை சுற்றி வந்தார். மாலையில் உற்சவர் சண்முகருக்கு அபிஷேகம் செய்து பூஜை நடந்தது.

    வேல் வாங்கும் நிகழ்வு

    இன்று மாலை கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்வர்ணாம்பிகை அம்மனிடம் இருந்து உற்சவர் சண்முகர் வேல் வாங்கும் நிகழ்வு நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு உற்சவர் மயில் வாகனத்தில் புறப்பட்டு ராஜகணபதி, லட்சுமி பெருமாள், முதல் அக்ரஹாரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் பகுதிகளில் சூரனை வதம் செய்யும் விழா நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு யானை வாகனத்தில் உற்சவர் புறப்பாடு நடக்கிறது. நாளை மதியம் 3 மணி முதல் 4.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

    அதேபோல் அம்மா பேட்டை குமர குரு சுப்ரமணியர், சீலநாயக் கன்பட்டி ஊத்துமலை முருகன், ஏற்காடு அடிவார ஆறுபடை முருகன் உள்பட மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடக்கிறது.

    வடசென்னி மலை பாலசுப்ரமணியர்

    ஆத்துார் அருகே வடசென்னி மலை பாலசுப்ரமணியர் கோவிலில் 49-ம் ஆண்டு சூரசம்ஹார விழா கடந்த 12-ந் தேதி கந்த சஷ்டி பூஜையுடன் தொடங்கியது. நேற்று மாலை 6.30 மணிக்கு மூலவருக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் விபூதி, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 8 மணிக்கு சூரனை வதம் செய்வதற்கு பார்வதி தேவியிடம் பாலசுப்ரமணியர் வேல் வாங்கும் நிகழ்வு நடந்தது. வேலை வாங்கிச்சென்ற பாலசுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, விநாயகருடன் மலர் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தேரில் இரவு 8.30 மணிக்கு கோவில் குளத்து நீரில் 3 முறை இழுத்து வரப்பட்டார். அப்போது திருமண மாகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டுவோர், பல்வேறு பிரச்னைகள் நீங்கவும் பெண்கள், விளக்கு, வாழை கற்பூரம் ஏற்றி குளத்தில் விட்டு வழிபட்டனர். இன்று மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

    Next Story
    ×