

சேலம்:
சேலம் அத்வைத ஆசிரம ரோடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி (90). சமூக ஆர்வலரான இவர் இன்று சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி படத்துடன் கூடிய பதாகையை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 40 ஆண்டு காலமாக அத்வைத ஆசிரமரோடு பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பள்ளிக்குள் சாக்கடை நீர் புகுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினசரி 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து போராடத்தை தொடங்கி உள்ளேன். அதன்படி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். இதற்கு தீர்வு கிடைக்கும் வரை அல்லது சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன். மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சாக்கடை நீர் புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.