search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டவேண்டும்
    X

    சேலம் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டவேண்டும்

    • சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 6-வது கூட்டம் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 6-வது கூட்டம் குழுவின் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான நிலைய இயக்குனர் ரமேஷ், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஹரிபாஸ்கர், சுரேஷ் இமானுவேல், பாபு, ஓமலூர் டி.எஸ்.பி.சங்கீதா மற்றும் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜா, வக்கீல் லட்சுமணபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சேலம் மாவட்டத்துக்கு இரும்பாலை, பெரியார் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், ரெயில்வே கோட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தந்து தொழில் நகரமாக மாற்றிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றிடும் வகையில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று மத்திய, மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கமாக விமான சேவை தொடங்குவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்-அமைச்சர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பலமுறை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோருக்கு இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

    சேலம் விமான நிலையத்தில் இருந்து கூடுதலாக நேரடியாக சீரடி, திருப்பதி மற்றும் கோவாவிற்கு விரைவில் விமான சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்திட ஒன்றிய விமான போக்கு வரத்து அமைச்சகத்தை கேட்டுக் கொள்ளப்பட்டது. சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கு இரு மார்க்கமாக பேருந்து வசதியை ஏற்படுத்தி தருவதற்கு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவை கேட்டுக் கொள்வது. சேலம் விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்குவதற்கு முன்பு விமான பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு காலை நேர விமான சேவையை சென்னைக்கு தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×