என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    குடிநீர் வழங்காததை கண்டித்து சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் அந்த வார்டு கவுன்சிலரிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 30 பேர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பு போல 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரப்பரப்பு நிலவியது.

    Next Story
    ×