search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடியில் நலத்திட்ட உதவிகள்
    X

    சேலத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் கார்மேகம், மேயர் ராமசந்திரன், பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணை மேயர் சாரதா தேவி, மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மீராபாய், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    சேலத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடியில் நலத்திட்ட உதவிகள்

    • கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.
    • கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார்.

    சேலம்:

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் பார்த்திபன் எம்.பி., சேலம் வடக்கு ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1996-ம் ஆண்டு கூட்டுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது விவசாயிகள் வாங்கிய கடனை

    முழுமையாக ரத்து செய்வோம் என்று ரூ.7,500 கோடியை முழுமையாக ரத்து செய்தார். 1996 முதல் 2001 காலகட்டத்தில் விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியதோடு 600-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் வங்கிகளுக்கும், 12,500 நியாய விலைக் கடைகளுக்கும், 3 மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. அதேபோல் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.20,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.

    கலைஞர் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய கடன் தொகைகளை நபார்டு வங்கிகளில் இருந்து 9 சதவீதத்திற்குக் கடனாகப் பெற்று, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் உள்ள 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 1,500 வங்கிகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து நிதியினைப் பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் 126 நகர வங்கிகளும், 70 நில வள வங்கிகள், 23 மத்திய வங்கிகளும், ஒரு மாநில வங்கியும் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற உள்ளூரில் உள்ள செயலாளர் மூலம் உறுதி செய்தவுடன் கடன் வழங்கப்படுவதால் விவசாயிகள் எளிதாக கடன் பெற முடிகிறது. விவசாயிகள், சிறுவியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும் துறையாக கூட்டுறவுத் துறை விளங்குகிறது.

    இக்கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியின் வாயிலாக பயிர்கடன், கால்நடை பராமரிப்புக்கடன், மத்தியக் காலக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், மகளிர் சிறுவணிகக்கடன் மற்றும் வீடு அடமானக்கடன் என 3,024 பயனாளிகளுக்கு ரூ.33.99 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட வழங்கப்படுகின்றன.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும், மாவட்ட அளவில் சிறப்பாக செயலாற்றிய 39 கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றி விருதுகளைப் பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சேலம் மேற்கு அருள் எம்.எல்.ஏ., மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் லலித் ஆதித்ய நீலம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் மீராபாய், சரக துணைப் பதிவாளர் முத்து விஜயா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×