search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டிஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
    X

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டிஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

    • தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
    • தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் தான். தித்திக்கும் தீபாவளி தினத்தை புத்தாடைகள் உடுத்தி பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    ஜவுளி கடைகளில் கூட்டம்

    தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சேலம் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    அலுவலக வேலைக்கு செல்பவர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிறு, குறு நிறுவனங்களில் தொழில் செய்பவர்களுக்கு 1-ந் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த 1-ந் தேதி முதல் ஜவுளி எடுக்க வருபவரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.

    விற்பனைக்கு குவிப்பு

    பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை உள்ளிட்டவைகள் சூரத்தில் இருந்தும், வேஷ்டி, துண்டு, டவல், பனியன், ஜட்டி உள்ளிட்டவை திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்து அதிக அளவில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டு சேலை ரகங்கள் காஞ்சிபுரம் திருப்புவனத்தில் இருந்தும் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

    இனிவரும் நாட்களில் தீபாவளி விற்பனை களை கட்டுமென்பதால் அதற்கான ஏற்பாடுகளில் கடை உரிமையாளர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதே போல தீபாவளி ஜவுளி விற்பனை ஒட்டி சேலத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாநகரில் ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் 500 சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    10 கோபுரங்கள்

    கடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீபாவளி திருடர்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை (5-ந் தேதி) முதல் தீபாவளி பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல் படையை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் ஸ்பீக்கர் செட் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து போலீசாருக்கு ஒத்துழைத்து அளித்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×