

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரில் வாரச்சந்தை உள்ளது. வியாழக்கிழமை தோறும் அதிகாலை முதல் நடைபெறும். இந்த சந்தைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் காய்கறிகள், கண் வலிக்கிழங்கு, சீத்தாபழம், பலுப்பாகற்காய் உள்ளிட் டவைகளை விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர்.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் கிராமப்புற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் வீடுகளில் பொங்கல் வைப்பார்கள். இதனால் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். விலை அதிகரித்த போதும் பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
செம்மறி ஆடுகள், சிறிய குட்டி ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. பெரிய ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் விரைவாக பொருட்கள் மற்றும் கால்நடைகள் விற்று தீர்ந்தன. இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
பல காலமாக நடைபெற்று வரும் அய்யலூர் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. சந்தையில் வசூல் செய்வது தீவிரம் காட்டுபவர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.