search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதி பெறாத திட்ட பணிகளுக்கு தீர்மானம்; அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    அனுமதி பெறாத திட்ட பணிகளுக்கு தீர்மானம்; அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • முறையான செலவு கணக்குகளை ஆராயாமல் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என வாக்குவாதம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நகர்மன்றம் அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களும், அ.தி.மு.க. கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 45 திட்டபணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குறுக்கிட்டு பேசியதாவது:

    தருமபுரி நகராட்சியில் முன்னாள் ஆணையர் சித்ரா என்பவர் பதவி வகித்தபோது அவர் வசித்து வந்த அரசு கட்டிடத்தை நன்றாக பாதுகாத்து வந்தார். அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றபிறகு தற்போது உள்ள ஆணையர் அண்ணாமலை அந்த கட்டித்தை பராமரிப்பு செய்வதாக கூறி ரூ.9 லட்சம் வரை கணக்கு காட்டியுள்ளார். நன்றாக உள்ள கட்டிடத்திற்கு எதற்காக இவ்வளவு தொகையில் பராமரிப்பு செலவு செய்ய வேண்டும். இதுகுறித்து முறையான செலவு கணக்குகளை ஆராயமால் கூட்டத்தில் அதற்கு ஒப்பதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.

    இதேபோன்று 45 திட்டப்பணிகளில் 35 திட்டப்பணிகள் நகர்மன்றத்தில் எந்தவித அனுமதிபெறாமல் ஏற்கனவே பணிகள் முடித்துவிட்டு அதற்காக தற்போது தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். எனவே முதலில் அனுமதி பெற்றுவிட்டு அதன்பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

    13 அ.தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களை வைத்து நீங்களாகவே தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டு உள்ளீர்கள். இந்த செயல் கண்டனத்துக்குரியதாகும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள், அனுமதி பெற்ற பிறகே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

    மேலும், அ.தி.மு.க உறுப்பினர்கள் கூறும்போது:-

    6-வது வார்டில் மயான சாலையில் சிலர் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை கட்டி வருகின்றனர். இதனை உடனே சர்வேயர்களை கொண்டு அளந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    அதனை தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும்போது:

    இதேபோல், நகராட்சியில் வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூல் செய்து வருகின்றனர் என்று உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதற்காக சென்னையில் உள்ள அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் ஒப்புதல் பெற்றபிறகே நகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்களாக உள்ள 2 வார்டுகளில் மட்டும் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மற்ற 31 வார்டுகளிலும் திட்டப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை. அதுவும் அ.தி.மு.க. கவுன்சிலர்களாக உள்ள வார்டுகளிலும் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என்றும், இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிப்போம் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

    அப்போது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×