

கடலூர்:
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது கடத்தல், மது விற்பனை மற்றும் கள் விற்பனை செய்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.