

ஓசூர்,
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதான சாலையிலிருந்து அரசனட்டிக்கு செல்லும் வழி மற்றும் சிப்காட் ஹவுசிங் காலனிக்கு செல்லும் வழியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்தவாறு, பெட்டிக் கடைகள், சாலையோர சிறு ஓட்டல்கள், பழக்கடைகளை வைத்தும், தள்ளுவண்டியிலும் சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வந்தனர்.
இதனால், இப்பகுதி மக்கள் அந்த சாலைகளில் சென்று வர மிகவும் அவதிப்பட்டனர். தவிர, இந்த சாலைகள் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளன.
ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றதையடுத்து, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், நேற்று அந்த பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள் பிரபாகரன், குமார் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதையொட்டி,ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் சாவித்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்படிருந்தனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.
பின்னர், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ஓசூர் மாநகராட்சி பகுதியில்,இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.