மழை குறைந்ததால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
வைகை அணை (கோப்பு படம்)
வைகை அணை (கோப்பு படம்)
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த ஆண்டு மழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் முழுகொள்ளளவிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி நேற்று 7574 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரின் தேவை குறைவாகவே உள்ளது. எனவே வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது. அணைக்கு 3888 கனஅடிநீர் வருகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 2416 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, அணைக்கு 500 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதிஉபரியாகவும் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 126.60 அடியில் நீடிக்கிறது. 243 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதி உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.2, தேக்கடி 8.6, மஞ்சளாறு 25, சோத்துப்பாறை 11 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com