வாலாஜா தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு

ரூ.1000 கிடைக்காததால் வந்திருந்தனர் உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
வாலாஜா தாலுகா அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்படுகின்றன.

நேற்று வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களின் குடும்ப அட்டையை வைத்து செல்போன் செயலியில் சரிபார்த்து உதவி மைய அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிவித்தனர்.

இதில் செல்போன் செயலியில் அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலையை அறிய முயன்ற போது சர்வரால் தாமதம் ஏற்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் பணி நடைபெறுவதால் செயலி சர்வரில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் வாலாஜா தாலுகா அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஆகவே, உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com