search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
    X

    ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

    • சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்
    • போலீசார் மடக்கி பிடித்தனர்

    அரக்கோணம்:

    நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

    அப்போது பயணிகள் சிலர் இறங்கினர். சிலர் ரெயிலில் ஏறியதும் சிறிது நேரம் கழித்து ரெயில் புறப்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயிலின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இருந்து செல்போனை பிளாட்பாரத்தில் இருந்த ஒரு வாலிபர் பறித்து கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக சக பயணிகள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான், ரெயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பது தெரியவந்தது.

    இவர் ஏற்கனவே பலமுறை ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது பங்கா ருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×