என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் மனு
- மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக புகார்
- உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்
நெமிலி:
நெமிலி அடுத்த பரமேஸ்வர மங்களத்தில் தென்றல் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
பல வருடங்களாக வசித்து வரும் இந்த பகுதியில் சிமெண்ட் சாலை வசதி இல்லை இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது.
மேலும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் பரவுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்ப டுகின்றனர்.
தென்றல் நகர் வரும் வழியில் நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வழி குறுகலாக உள்ளது. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெமிலி பி.டி.ஓ. அலுவலகம் சென்று ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, துணை சேர்மன் தீனதயாளன் மற்றும் பி.டி.ஓ. சிவராமன் முன்னிலையில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.