கல்லூரி மாணவர் விபத்தில் பலி

உறவினர்கள் சாலை மறியல் போலீசார் பேச்சுவார்த்தை
கல்லூரி மாணவர் விபத்தில் பலி
Published on

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி, இவருடைய மனைவி ரேவதி இவர்களுடைய மகன் சஞ்சய் (வயது 17). இவர் சோளிங்கர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டிலிருந்து பாணாவரத்திற்கு பைக்கில் சென்றார்.

அப்போது பாணாவரம் அருகே சென்ற போது சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப் லைனில் மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சஞ்சய் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாணாவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பாணாவரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் சஞ்சய் இறந்திருக்க மாட்டார்.

மேலும் மருத்துவர் இல்லாததே இறப்பிற்கு காரணம் எனக் கூறி 100-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

உடனடியாக அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமாறன்,பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பார்த்திபன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com