

ராமேசுவரம்:
ராமநாதாபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், மற்றும் கோழித்தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கனவாய் ரூ.400, நன்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 விலை இருந்து வந்தது.
இந்த நிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற பின்னர் இறால் ரூ. 350-400, நன்டு ரூ. 250, கனவாய் ரூ. 180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றினைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை குறைந்துள்ளனர்.
இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பல ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.
இதனால் படகுகளை இயக்க முடியாத நிலையில் கடந்த 8-ந்தேதி முதல் காலவரையற் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்கள் ஆன நிலையில் பெரும்பால மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று காலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்லும் தங்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்கவும். பிடித்து வரும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.