இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைப்பு

ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைக்கப்பட்டனர். தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கை வாலிபர் மற்றும் பாஸ்போர்ட் ஏஜெண்ட் சிறையில் அடைப்பு
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை கொழும்பு மரதானா பகுதியை சேர்ந்த துவான் சபைதீன் (வயது 45) என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய சோதனையில் வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, ஆதார்கார்டு ஆகியவை இருந்ததை கண்டு அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் சட்டவிரோதமாக உரிய காலத்திற்கு பிறகு தங்கியிருப்பதுடன் மேற்கண்ட ஆவணங்களை பெற்றுள்ளதும் தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீ சார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாமனாரின் முகவரியை பயன்படுத்தி பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இந்த நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் பழைய பாஸ்போர்ட்டை பயன் படுத்த முடியாததால் புதிய பாஸ்போர்ட் பெற எண்ணி உள்ளார்.

இதற்காக பெரிய பட்டி னத்தை சேர்ந்த ஜகாங்கீர் என்பவரை அணுகினார். அவர் ஆவணங்களை பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் அருகே பனைக் குளம் மேற்குத்தெருவை சேர்ந்த டிராவல் ஏஜென்சி நடத்தும் அன்வர்ராஜா(45) என்பவரிடம் பொறுப்பை ஒப்படைத்து தூத்துக்குடி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்று கொடுத்துள்ளார். இதனை வைத்து அவர் குடும்பத்துடன் துபாய் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கியூ பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பு ல்லாணி போலீசார் வழக்கு பதிவு செய்து துவான் சபைதீனை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் பனைக்குளத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தும் பனைக்குளத்தை சேர்ந்த அன்வர் ராஜாவை பிடித்து வந்து விசாரித்தனர்.

இதையடுத்து துவான் சபைதீன் (வயது 45), பனைக்குளம் அன்வர் ராஜா(45) ஆகியோரை போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். தலை மறைவான ஜகாங்கீரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com