search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போகலூரில் யூனியன் கூட்டம்
    X

    போகலூர் யூனியன் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. 

    போகலூரில் யூனியன் கூட்டம்

    • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போகலூர் யூனியன் கூட்டம் நடந்தது.
    • அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை என வெளிநடப்பு செய்தனர்.

    போகலூர்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    அப்போது திடீரென அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை. இந்த கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

    உடனே ஆணையாளர் செல்லம்மாள் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தலைவர் சத்யா குணசேகரன் அறையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

    துணைத்தலைவர் பூமிநாதன் பேசுகையில், அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எப்போது போனில் தொடர்பு கொண்டாலும் மீட்டிங்கில் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படி இருந்தால் மக்கள் பணியை நாங்கள் எப்படி செய்வது? அலுவலகத்திற்கு வரும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உட்கார சேர் கொடுப்பதில்லை. இது சரியா?.

    எங்களுக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்றார்.

    தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில், அதிகாரிகள் 11 மணிக்கு தான் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்தால் என்ன வேலை செய்ய முடியும்? அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்ஷன்ட் போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மேலும் அதிகாரிகள் தினமும் எந்த வேலையை பார்க்க செல்கிறீர்கள் என்பதை படம் எடுத்து எனது வாட்ஸ் அப்புக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதற்கு ஆணையாளர் செல்லம்மாள் பதில் அளிக்கையில், இனிமேல் சரியான நேரத்திற்கு வராத அலுவலர்களுக்கு ஆப் செட் போடுங்கள். அதை நான் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.

    ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் பயந்து பணியாற்றினார்கள். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது என்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூரில் டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் குறைந்த மின் அழுத்தம் வருகிறது.

    இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. உரத்தூர் - கொடிக்குளம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர். அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

    Next Story
    ×