போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள்

திருவாடானையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்கள்
Published on

திருவாடானை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து ஓரியூர் வரை பாண்டுகுடி வழியாக செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் கனரக வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவாடானை அருகே உள்ள ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அன்னை வேளாங்கண்ணி பேராலயமும் உலக பிரசித்தி பெற்றது.

இத்திருத்தலங்களின் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8, 9-ந்தேதிகளில் முடிவடையும். அதே போல் இந்த வருடமும் தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் வழிபட்டு பின்பு வேளாங் கண்ணிக்கு சென்று அங்கு உள்ள புனித ஆரோக்கிய மாதாவை வழிபட பக்தர்கள் நடைபயணமாகவும், வாகனங்களிலும் பயணிக்கின்றனர்.

பக்தர்களும், வாகன ஓட்டிகளும் திருவாடா னையில் இருந்து பாண்டுகுடி வழியாக ஓரியூர் செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் உள்ள கருவேல மரங்களால் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதே போல் அஞ்சுகோட்டை சாலை பிரிவில் ஓரியூர் செல்ல வழிகாட்டும் பெயர் பலகை இல்லாததாலும் பயணிகள் வழி மாறி செல்வது மிகவும் வேதனையளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருபுறமும் உள்ள கருவேல மரங்களை அகற்றவும், அஞ்சுகோட்டை சாலை பிரிவில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com