

தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவெற்றியூர் சமுதாயக்கூடத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு, வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட சமூக நலத்துறை, மருத்துவத்துறை, சைல்டு லைன் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவனம் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தின. ஸ்பீடு அரசு சாரா தொண்டு நிறுவன இயக்குநர் தேவராஜ் தலைமை தாங்கினார். திட்ட இயக்குநர் சந்திர எபிநேசர் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாசுகி, முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், சமூக நல விரிவாக்க அலுவலர் மெர்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித நார்பட் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வேல்டு விஷன் தொண்டு நிறுவன ஊழியர்களின் கவிதை பாடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் தொண்டு நிறுவன தன்னார்வலர் பொன்னுத்தாயி நன்றி கூறினார். இதில் திருவாடானை பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.