சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும்

ரூ.52 லட்சத்தில் சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும் என நகராட்சி தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.
சுற்றுச்சுவர், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்படும்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சேதுபதி நகர், தங்கப்பா நகர், கோட்டைமேடு தெரு மற்றும் புதிய பஸ் நிலையம் அருகில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதியவர்கள், குழந்தைகள், அந்த பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இந்த பூங்காக்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்தும் சேதமடைந்துள்ளன.

புதிய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் அருகில் அமைந்துள்ள பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. இங்கு திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, குப்பை கொட்டுவது, மது அருந்தும் இடமாக மாறி உள்ளது.

இது குறித்து நகராட்சி தலைவர் கார்மேகம் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் உள்ள பூங்காக்கள், ஊரணிகளை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, வேலிகள் அமைக்கப்படுகிறது. பசுமையாக்கல் திட்டத்தில் இங்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிட்டு தற்போது 15 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்த்துள்ளோம்.

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரித்து பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது முயற்சியில் தங்கப்பாநகர், மகர்நோன்பு பொட்டல் பூங்காவில் ரூ.36 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், மரக்கன்றுகள், பூச்செடிகள் வைக்க உள்ளோம்.

இதே போல புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.எஸ்.கே. பூங்காவும் ரூ.16 லட்சத்தில் சுற்றுச்சுவருடன் முழுமையாக புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com