

முதுகுளத்தூர்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.
ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.