

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியை பயிற்சிக்காக அனுப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஒரு ஆசிரியர் மட்டுமே 120 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பள்ளியின் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து நீர் கசிந்து சுவர் வழியாக வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் லேசான கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்துள்ளனர்.
பள்ளி நேரத்தில் மழை பெய்யும் போது அந்த வகுப்பறையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனை அங்குள்ள துப்புரவு பெண் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்றி வருகிறார். இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தொடக்க கல்வி அலுவலரும் இப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளி இயங்கும் வகையில் பழைய கட்டிடத்தினை சீரமைத்து தரவேண்டுமென மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.